Thursday, February 24, 2011

ஆதியூழிக்குள் சஞ்சரிக்கிறது காண்டவம்


மந்திகள் கொப்பிழக்கப் பாயும் இருள்

சிறுவர்களின் மூத்திரத்தில் சுருப்பிய

குழிகளை மூடியும் அதற்கு மேலுமாய்

வானத்தைப் பெய்கிறது மழை

கால் இடுக்கில் கைகள் புக

குளிரில் சுருங்கிற்று

காலத்தில் தோற்ற வாலிபம்

ஏதிலிக் கூடாரத்தில்

போர்வைகளில் கசிகிறது ஈரம்

அநுபாலத்தை இழந்து

சயனத்தில் யனிக்கிறது பிரபஞ்சம்

தூர்ந்த காலத்தை கக்கத்தில் அடக்கி

மழையைக் கொல்லும்படி

காண்டவத்தில் எழுகிறது

ஆட்காட்டிப் பறவையின் குரல்

தொலைவுற்ற காலமொன்றில்

ஆட்காட்டிச் சத்தத்தில் நாய்கள் அடரும்

அம்மா நரைக்கண்களால் விழிப்பாள்

ஊர்ந்தூர்ந்து உருவம் வரும்

களைத்துண்ணும் கால்நீட்டி கண்ணயரும்

ஆட்காட்டிச் சொண்டுகள் அடங்காப்பொழுதுள்

பேரிருளில் பெருவுரு கரையும்

தூர்வுற்ற காலத்துக்கப்பால்

அர்த்தப்பிரமாணங்களற்று சுருள்கிறது

ஆட்காட்டும் பறவையின் சத்தம்

அம்மா நரைக்கண்களில் துஞ்சுகிறாள்

மழையைக் கொல்லத்தொடங்கிற்று தவளைகள்

அகாலத்துள் அமிழ்கிறது மனம்

ஆதியூழியுள் சஞ்சரிக்கிறது காண்டவம்

No comments:

Post a Comment