மந்திகள் கொப்பிழக்கப் பாயும் இருள்
சிறுவர்களின் மூத்திரத்தில் சுருப்பிய
குழிகளை மூடியும் அதற்கு மேலுமாய்
வானத்தைப் பெய்கிறது மழை
கால் இடுக்கில் கைகள் புக
குளிரில் சுருங்கிற்று
காலத்தில் தோற்ற வாலிபம்
ஏதிலிக் கூடாரத்தில்
போர்வைகளில் கசிகிறது ஈரம்
அநுபாலத்தை இழந்து
சயனத்தில் யனிக்கிறது பிரபஞ்சம்
தூர்ந்த காலத்தை கக்கத்தில் அடக்கி
மழையைக் கொல்லும்படி
காண்டவத்தில் எழுகிறது
ஆட்காட்டிப் பறவையின் குரல்
தொலைவுற்ற காலமொன்றில்
ஆட்காட்டிச் சத்தத்தில் நாய்கள் அடரும்
அம்மா நரைக்கண்களால் விழிப்பாள்
ஊர்ந்தூர்ந்து உருவம் வரும்
களைத்துண்ணும் கால்நீட்டி கண்ணயரும்
ஆட்காட்டிச் சொண்டுகள் அடங்காப்பொழுதுள்
பேரிருளில் பெருவுரு கரையும்
தூர்வுற்ற காலத்துக்கப்பால்
அர்த்தப்பிரமாணங்களற்று சுருள்கிறது
ஆட்காட்டும் பறவையின் சத்தம்
அம்மா நரைக்கண்களில் துஞ்சுகிறாள்
மழையைக் கொல்லத்தொடங்கிற்று தவளைகள்
அகாலத்துள் அமிழ்கிறது மனம்
ஆதியூழியுள் சஞ்சரிக்கிறது காண்டவம்
No comments:
Post a Comment