அதீத பிரயத்தன முயல்தலுக்குப் பின்னும்
இன்னும் என் கைப்பிடிக்குள் சிக்கிவிடாதிருக்கிறது
மனம் என்னும் மாயத்திரள்
கட்டளைக்கு கீழ்படிதல் என்னுமியல்பற்று
தன்னுள் வசப்படுத்தி அதன் பாட்டில்
என்னை இழுத்தலைதலில் அதற்கிருக்கும் தனிப்பட்ட
பிரியத்தைக் காண்கிறேன்
இருத்தல் மீது விருப்பைச் சொரிவதும்
முட்தரைகளில் என்னை உலாவ விடுவதும்
அதன் ஆசைகளில் ஒன்றென்ற மொழிதலின் சாத்தியம்
பெருக்கெடுத்துக் கொண்டேயிருக்கிறது
ஈக்கிலில் சுருக்கிட்டுப்பிடித்த வேலி ஓணானை
கொண்டாடும் குழந்தைகளின் தெருக்களை
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்
வனாந்தர வெளிகளின் கற்பாறைகளில் என் எழுத்துக்கள்
பொறிக்கப்படுகின்றன
முற்றுமிழந்திருத்தல் என்பது இரவுகளில் மட்டுமே
வசப்பட்டிருக்கிறது
ஊர்கள் எரிந்து மணக்கும் சாம்பல் முகடொன்றுக்குள்
என்னை ஒருவன் புதயலாய்த் தோண்டுகிறான்
நான் இன்னும் நானாக இருக்கிறேன் என்னும்
மாயைக்குள் இருந்து அவன் விடுபடவில்லை
எப்போதோ எரிந்து போன நான்
அவனிடம் நழுவி சாம்பலாய்
காற்றில் கலந்து கொண்டிருக்கிறேன்
No comments:
Post a Comment