மழைக்காக தவளைகள் அழுகின்றன
அதன் குரல்களில் மரணம் வழிகிறது
அம்மா நீயும் அழுது கொண்டிருக்கிறாய்
மழையில் உறைந்த இரவின் ஆர்ப்பரிப்பை நீவி
எனக்குள் கேட்கிறது உன் குரல்
மழைப்பொழிவை தாங்காத
நம் அகதிக்கூடாரம்
அதன் இயலாமையின் ஓட்டைகளால்
அழுகிறது
உன்னிடம் இருக்கும் எல்லாப்பாத்திரங்களிலும்
கொட்டில் அழுதூற்றும் கண்ணீரை
ஏந்துகிறாய்
உனது கண்ணீரை நான்
எந்தப்பாத்திரத்தில் ஏந்த
எருமை மாடுகளுக்கு பிரியமான சகதியை
காலம் நமக்குள் திணித்திருக்கிறது
சேறும் சகதியுமான
நம் கூடாரத்துக்குள்ளும்
நீ இரவுக்கான உணவை
தயார் செய்கிறாய்
சோற்றில் உப்பாகிக் கலக்கிறது
உனது கண்ணீர்
மழைக்காலம் முன்பு போல்
என்னை மகிழ்விப்பதில்லை
நடுக்கத்தை விரும்பி ஓடி வந்து
இப்போதெல்லாம் நான்
உன் மடியில் சுருண்டு படுப்பதில்லை
அம்மா குளிரிலும் என்னுடல்
இப்போது வியர்க்கிறது
நிலத்தில் ஊரும் அட்டைகள் என்னில் ஊர்வதாய்
புளிக்கிறது என்னுடல்
மனம் மட்டும் சிறு கூதல் காற்றிலும்
பூச்சியப்பெறுமானத்தில் உறைந்து சுருழ்கிறது
அம்மா நீ அழுதுகொண்டிருக்கிறாய்
வெளிப்படாத உன் குரல்
தவளைகளின் சத்தத்தை மீறியும்
என்னை கொல்கிறது
பறிக்கப்பட்ட உனது நிலத்துக்காகவும்
மழைக்காலம் பறித்த உன் தூக்கத்திற்காகவும்
வானத்தோடு சேர்த்து நீயும்
ஐந்து மார்கழிகள் அழுதுவிட்டாய்
அம்மா நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்
கண்ணீரற்ற கண்களால்
நிலத்தை பறித்தவன் மீதும்
வீட்டை இடித்தவன் மீதும்
மழையின் மீதும் அழாதே
நீ அழ வேண்டியது என் பொருட்டே
உனது காலத்தை என்னிடமே தந்தாய்
எனது காலம் என்னிடம்
வெறும் சொற்களை மட்டுமே தந்தது
கையாலாகாதவனாய் வாழ்வைக் கரைத்தவனாய்
உனது காலத்தை சுமக்க முடியாத
வக்கற்ற வாலிபனாய்
வலி சுமந்து உன் முன்னே
நடைப்பிணமாய் திரிகின்ற
எனக்காக இனி அழுவாயா அம்மா
உனது மகனுக்காக மட்டும் இனி அழு
நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்
No comments:
Post a Comment