Friday, March 11, 2011

சூரியனைச் சினேகித்தல்

மூழ்காத சமுத்திரத்தில் மூழ்கி

தினம் எழுந்து

நாளாந்தம் என் வாசலிலே

வந்துதிக்கும் சூரிய தேவனே

இன்னும் ஆறாத நெடுந்துயரின் பாரத்தை

தோளாறத் தூக்கி வைக்க

எனக்கிங்கு மனிதரில்லை

எக்கணமும் மாறாது நீதான்

புலர்பொழுதில் வந்துந்தன் கதிர்க்கரத்தால்

மேனியெல்லாம் நனைக்கின்றாய் அதனால்

உன்னை நம்பத்துணிகின்றேன்

விடி பொழுதில் பனிப்புகையை குடித்து விட்டு

வந்தமரு

இரு தேனீர்க்கோப்பைச் சந்திப்பில்

என்னைத் திறக்கின்றேன்

ஊர் அலைந்து திரிபவன் நீ

ஊரிழந்து அலைபவன் நான்

உனக்கு யாதும் ஊரே

எனக்கு ஏதும் ஊரில்லை

சரித்திரங்கள் கண்டவன் நீ

சரித்திரம் சாய தரித்திரம் பிடித்தவன் நான்

இத்தியாதி வித்தியாசங்களுள்ளும்

உன்னை நம்பத்துணிகின்றேன்

முதல் தேனீர் கோப்பையில்

நம் முரண்பாடுகளைக் களைவோம்

என் பெரு நிலத்தை நீ அறிவாய்

நான் விட்டுவந்த என் முற்றமும் உனக்கு

புதிதல்ல

அன்று நானும் அங்கிருந்தேன்

நீயும் இருந்தாய்

இன்று நானில்லை நீயிருக்கிறாய்

எனது மண்ணை அறியும் ஆவலில்

தேங்கி வழிகிறது மனம்

நாளாந்தம் நீ கண்டுவந்த செய்திகளை

சொல்லிவிடு எந்தனுக்கு

வில்லுக்குளத்தில் தாமைரைகள் பூத்ததா

வாசல் ஒட்டுமாவில் அணில்கள் தாவினவா

முற்றத்து மல்லிகை பூத்துச் சொரிந்ததா

தென்னைகளில் தேங்காய்

குலை குலையாய் விழுகிறதா

தங்கை நட்ட பூ மரங்கள்

கருகிவிட்டனவா

வாசலில் அறுகு படர்ந்து அடர்கிறதா

முச்சந்திப் புளியடியில் பேய்கள் உறைகிறதா

விட்டுவந்த வெள்ளைப் பசு

கன்றேதும் ஈன்றதுவா

என் பிரிவை தாங்காத பெரு நிலத்தாய்தான்

அழுது தொலைத்தாளா

ஏதுமறியாதோர் இருள் வெளியில் இருக்கின்றேன்

மேய்ப்பானுமில்லை மேச்சல் நிலமில்லை

மாயக்கதைகளுக்குள் புதைகின்றேன்

மானிடர்கள் திரித்துவிடும் புரளிகளின்

உண்மைகளை நீயறிவாய்

என் மேய்ச்சல் நிலப்பக்கம் சென்றாயா

மேய்ப்பானை எங்கேனும் கண்டாயா

நாளை குறு நடையில் என் பொன்னிலத்தை

கடக்க நேர்ந்தால் அதனிடத்தில்

ஊர் நினைவில் உக்கி ஊனழிந்து

உயிரணுக்கள் உருக்குலைந்து இற்றுவிட்ட மனதுடனே

உடல் தழுவ காத்திருக்கும்

என் நிலையை சொல்லிவிடு

மேய்ப்பானைக் கண்டால் சாப்பொழுதில் ஒருதடவை

முகம் காட்ட பரிந்துரை செய்

பரிதிக் கடவுளே

உன்னை நம்பத்துணிகின்றேன்

என்னைக் கடந்த நான்

மெளனிக்கப்பட்ட எனது தேசியகீதத்தோடு

வனாந்தரப்பகல் ஒன்றில்

வெறிச்சோடிய மயானத்தெருவினூடு

எனது பிணத்தை அவர்கள்

சுமந்து சென்றனர்

வெற்றுடல் நிரம்பிய பெட்டியில்

எனது திமிரும் வைராக்கியமும்

பெருந்தோள் வீரமும்

தேசத்தின் மீதென் காதலும்

சென்னிறத் திரவமாய் சொட்டிக்கொண்டிருந்தது

சிதறிய துளிகள் ஒவ்வொன்றிலும்

நான் முளைத்தேன்

அதுவரை நிறங்களற்றிருந்த நான்

சிவப்பென காற்றில் கலந்து கொண்டிருந்தேன்

எல்லாமாகிக் கலந்த என்னை

வெற்றுடலாக்கிய வீரத்தைப் பற்றிய மாயக்கதைகளோடு

பலர் கடந்து சென்றனர்

எனது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது

சிறுவர்கள் என்னை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்

வானம் என்னை அழுதது

நான் வானத்தை சிரித்தேன்

போர்க்குணத்தோடு என் கவிதைகளை

ஒருவன் படித்துக்கொண்டிருந்தான்

எனது நாலைந்து சொற்களை காற்று

முதுகில் ஏற்றி அலைந்தது

எனது மீதிப்பகலை அந்திரத்து

மர்ம வெளிகளில் பூசினேன்

வெறித்துச் சோம்பிய முகங்களுடன்

வீதியில் குழுமிய கூட்டத்தினிடையே

நெரிசல்களை நீவி

அவர்கள் சுமந்து சென்ற என் உடலை

பாத்துக்கொண்டிருந்தேன்

எண்ண வெளிகளில் மூழ்கிப்பார்க்க

நேற்றுப் போல் இருக்கிறது தெருவில்

என்னைக் கடந்து சென்ற எனது பிணம்