Friday, March 11, 2011

சூரியனைச் சினேகித்தல்

மூழ்காத சமுத்திரத்தில் மூழ்கி

தினம் எழுந்து

நாளாந்தம் என் வாசலிலே

வந்துதிக்கும் சூரிய தேவனே

இன்னும் ஆறாத நெடுந்துயரின் பாரத்தை

தோளாறத் தூக்கி வைக்க

எனக்கிங்கு மனிதரில்லை

எக்கணமும் மாறாது நீதான்

புலர்பொழுதில் வந்துந்தன் கதிர்க்கரத்தால்

மேனியெல்லாம் நனைக்கின்றாய் அதனால்

உன்னை நம்பத்துணிகின்றேன்

விடி பொழுதில் பனிப்புகையை குடித்து விட்டு

வந்தமரு

இரு தேனீர்க்கோப்பைச் சந்திப்பில்

என்னைத் திறக்கின்றேன்

ஊர் அலைந்து திரிபவன் நீ

ஊரிழந்து அலைபவன் நான்

உனக்கு யாதும் ஊரே

எனக்கு ஏதும் ஊரில்லை

சரித்திரங்கள் கண்டவன் நீ

சரித்திரம் சாய தரித்திரம் பிடித்தவன் நான்

இத்தியாதி வித்தியாசங்களுள்ளும்

உன்னை நம்பத்துணிகின்றேன்

முதல் தேனீர் கோப்பையில்

நம் முரண்பாடுகளைக் களைவோம்

என் பெரு நிலத்தை நீ அறிவாய்

நான் விட்டுவந்த என் முற்றமும் உனக்கு

புதிதல்ல

அன்று நானும் அங்கிருந்தேன்

நீயும் இருந்தாய்

இன்று நானில்லை நீயிருக்கிறாய்

எனது மண்ணை அறியும் ஆவலில்

தேங்கி வழிகிறது மனம்

நாளாந்தம் நீ கண்டுவந்த செய்திகளை

சொல்லிவிடு எந்தனுக்கு

வில்லுக்குளத்தில் தாமைரைகள் பூத்ததா

வாசல் ஒட்டுமாவில் அணில்கள் தாவினவா

முற்றத்து மல்லிகை பூத்துச் சொரிந்ததா

தென்னைகளில் தேங்காய்

குலை குலையாய் விழுகிறதா

தங்கை நட்ட பூ மரங்கள்

கருகிவிட்டனவா

வாசலில் அறுகு படர்ந்து அடர்கிறதா

முச்சந்திப் புளியடியில் பேய்கள் உறைகிறதா

விட்டுவந்த வெள்ளைப் பசு

கன்றேதும் ஈன்றதுவா

என் பிரிவை தாங்காத பெரு நிலத்தாய்தான்

அழுது தொலைத்தாளா

ஏதுமறியாதோர் இருள் வெளியில் இருக்கின்றேன்

மேய்ப்பானுமில்லை மேச்சல் நிலமில்லை

மாயக்கதைகளுக்குள் புதைகின்றேன்

மானிடர்கள் திரித்துவிடும் புரளிகளின்

உண்மைகளை நீயறிவாய்

என் மேய்ச்சல் நிலப்பக்கம் சென்றாயா

மேய்ப்பானை எங்கேனும் கண்டாயா

நாளை குறு நடையில் என் பொன்னிலத்தை

கடக்க நேர்ந்தால் அதனிடத்தில்

ஊர் நினைவில் உக்கி ஊனழிந்து

உயிரணுக்கள் உருக்குலைந்து இற்றுவிட்ட மனதுடனே

உடல் தழுவ காத்திருக்கும்

என் நிலையை சொல்லிவிடு

மேய்ப்பானைக் கண்டால் சாப்பொழுதில் ஒருதடவை

முகம் காட்ட பரிந்துரை செய்

பரிதிக் கடவுளே

உன்னை நம்பத்துணிகின்றேன்

என்னைக் கடந்த நான்

மெளனிக்கப்பட்ட எனது தேசியகீதத்தோடு

வனாந்தரப்பகல் ஒன்றில்

வெறிச்சோடிய மயானத்தெருவினூடு

எனது பிணத்தை அவர்கள்

சுமந்து சென்றனர்

வெற்றுடல் நிரம்பிய பெட்டியில்

எனது திமிரும் வைராக்கியமும்

பெருந்தோள் வீரமும்

தேசத்தின் மீதென் காதலும்

சென்னிறத் திரவமாய் சொட்டிக்கொண்டிருந்தது

சிதறிய துளிகள் ஒவ்வொன்றிலும்

நான் முளைத்தேன்

அதுவரை நிறங்களற்றிருந்த நான்

சிவப்பென காற்றில் கலந்து கொண்டிருந்தேன்

எல்லாமாகிக் கலந்த என்னை

வெற்றுடலாக்கிய வீரத்தைப் பற்றிய மாயக்கதைகளோடு

பலர் கடந்து சென்றனர்

எனது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது

சிறுவர்கள் என்னை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்

வானம் என்னை அழுதது

நான் வானத்தை சிரித்தேன்

போர்க்குணத்தோடு என் கவிதைகளை

ஒருவன் படித்துக்கொண்டிருந்தான்

எனது நாலைந்து சொற்களை காற்று

முதுகில் ஏற்றி அலைந்தது

எனது மீதிப்பகலை அந்திரத்து

மர்ம வெளிகளில் பூசினேன்

வெறித்துச் சோம்பிய முகங்களுடன்

வீதியில் குழுமிய கூட்டத்தினிடையே

நெரிசல்களை நீவி

அவர்கள் சுமந்து சென்ற என் உடலை

பாத்துக்கொண்டிருந்தேன்

எண்ண வெளிகளில் மூழ்கிப்பார்க்க

நேற்றுப் போல் இருக்கிறது தெருவில்

என்னைக் கடந்து சென்ற எனது பிணம்

Thursday, February 24, 2011

காதலி எழுதிய கடிதங்கள் - 1

என்னில் எல்லாமாகிவிட்ட காதலனுக்கு

வாழ்வு இற்று விட்ட பின்னும்

நீ இருக்கின்றாய் என்னும்

என்னுயிரை மீட்டுதருகின்ற செய்தி ஒன்றுக்காய்

இன்னும் செத்துவிடாமல் இருக்கும்

காதலி எழுதிக்கொள்வது

தீப்பிளம்ப்பாய் சுடுகின்ற ஒவ்வரு நிமிடங்களில்

ஓங்கியழ உரமுமின்றி உன்னினைவில் ஊனுருகி

உன்னுருவம் கண்களிலே மறையாதிருக்க என்று

தூங்காது விழித்திருக்கும் என்விதியை அறிவாயா

எதை நினைத்து அழுவதென்று

கண்களுக்கு தெரியவில்லை

எங்கென்று தெரியாதா எந்தன் தம்பிக்கா

தாலியிட்ட கணவனின்னும் மீண்டுவரா பெருவலியில்

துடித்தழும் என் அக்காக்கா

இத்தனைக்கும் மேலாக என்னுயிரென்று ஆகிவிட்டு

இன்னும் மீழாமல் இருக்கின்ற உந்தனுக்கா

இத்தனைக்கும் அழுதழுது கண்கள் இன்னும் ஓயவில்லை

ஆறாத பெருவலியில் அடிமனது துடித்தாலும்

மாறாத உன் நினைவே இன்னும் எனை

உயிர் வாழ வைக்குதடா

போர் கொண்டு போய்விட்ட என்வாழ்வின் நின்மதியை

நீவந்து தருவாயா என்று மனம் ஏங்குதடா

எங்கோ நீ இருக்கின்றாய்

என்னினைவில் துடிக்கின்றாய்

மீண்டு வந்தென்னை மார்பு தழுவி விட

மனம் ஏங்கி தவிக்கின்றாய்

என்றெல்லாம் அடிமனது எனக்குள்ளே

உரைக்கின்ற ஒன்றில்தான்

இன்னும் இந்த பிச்சை உயிர்

என்னில் ஒட்டிகிடக்கிறது

காற்றோடு கலந்துவிட்ட

உன் மூச்சுக்காற்றுத்தான் எதோ எந்தனுக்கு

தைரியத்தை கொடுக்கிறது

மாயக்குவளை

உலகத்தை புனைந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன்

என்னை புனையும் குறிப்புக்காக

அந்த குயவன் புனைந்த உலகம் கண்ணாடியிலான

மாயக்குவளையாக என் கைகளில் இருக்கிறது

அதன் ஒவ்வரு இழைகளும் மிக நூதனமானவை

உறவு உயர்வு இரக்கம் பொருள் என்ற படி

மாயக்குவளையின் ஒவ்வரு இழைகளும் இப்படித்தான்

அதனுள் என்னை ஊற்றுகிறேன்

குவளையில் நிரம்பி வழிகிறது நான்

மாயத்துள் மாயமற்று இருக்கிறது எனது உயிர்

குவளையாகி களிக்கிறது வழிகின்ற நான்

எனது எதிர்பார்ப்பின் தூர்தலில்

இழைகள் சிதைய உடைகிறது குயவனின் குவளை

உள்ளிருந்து நிலத்தில் சிந்திய என்னில்

துளிகளாய் சிதறிக்கிடக்கிறது நான் ஊற்றிய நம்பிக்கைகள்

என்னை ஊற்ற ஊற்ற மாயக்குவளை உடைகிறது

குயவனின் குறிப்புகளுக்குள் புகுந்து

என்னில் மாயயை புனைகிறேன்

மாயக்குவளைக்குள் மாயயை புனைந்த என்னை ஊற்ற

உடையாமல் இருக்கிறது குவளை

குவளையில் வழிகிறேன் மாயத்தில் ஊறிய நான்

உலக இயல்பில் இசைதலில் இருக்கிறது

எனது இருப்பு

எங்கள் குழந்தைகள் அழுகிறார்கள்

அந்த குழந்தைகள் அழுகிறார்கள்

இதுவரை மீண்டு வராத அப்பாவுக்காக

அவர்களின் அம்மா வாசலை வெறித்துக்கொண்டிருக்கிறாள்

இடை விடாது அழுகிறது அவளின் கண்கள்

இணை பிரிந்து அழும் குயிலின் தகிப்பில் கிடக்கிறது

அவளின் மனம்

அநேகபொழுதுகளில் தற்கொலைக்கு துணியும் அவள்

பால் மணம் மாறாத குழந்தைகளின் முகத்தில்

உயிர்க்க வேண்டியிருக்கிறது

அந்த குழந்தைகள் எப்போதும் போலவே

சேமித்து வைக்கிறார்கள்

தமக்கு வழங்கப்படும் உணவின் பாதியை

வராமல் போன அப்பாவுக்கு

கடவுளின் குணம் அறியாத பிஞ்சுக் குழந்தைகள்

பிராத்திக்கிறார்கள்

அப்பா எப்போது வருவார் என்ற அவர்களின் கேள்வி

தாயை சாகடிக்கிறது

நாளைக்கு என்ற வார்த்தையையே

அவள் பதிலாக எப்போது உச்சரிக்கிறாள்

குழந்தைகளில் ஒருவன் அப்பாவை போலவே

தலை சீவிக்கொள்வதும் அவரின் உடைகளை

அணிவதுமாக இருக்கிறான்

அம்மா குழந்தைகளின் குறும்பை சேர்த்து வைத்திருக்கிறாள்

கணவன் வந்தவுடன் சொல்வதற்கென்று

எல்லா தடுப்பு முகாம்களிலும்

தன் கணவனின்முகம் தெரிகிறதா என

தேடித் தேடி களைத்துபோய் இருக்கிறது

அவளின் மனமும் கால்களும்

எனது தேசத்தின் கொடிய போர்

ஓவியங்களை கிழித்துக்கொண்டிருக்கிறது

பொம்மைகளை உடைத்து

குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்

காணாமல் போன அப்பா

மீண்டு வர வேண்டுமென்று

பிரார்த்தித்த படியே.

அப்பா

இன்னும் வரவில்லை 

என்னைக் கடந்த நான்

மெளனிக்கப்பட்ட எனது தேசியகீதத்தோடு

வனாந்தரப்பகல் ஒன்றில்

வெறிச்சோடிய மயானத்தெருவினூடு

எனது பிணத்தை அவர்கள்

சுமந்து சென்றனர்

வெற்றுடல் நிரம்பிய பெட்டியில்

எனது திமிரும் வைராக்கியமும்

பெருந்தோள் வீரமும்

தேசத்தின் மீதென் காதலும்

சென்னிறத் திரவமாய் சொட்டிக்கொண்டிருந்தது

சிதறிய துளிகள் ஒவ்வொன்றிலும்

நான் முளைத்தேன்

அதுவரை நிறங்களற்றிருந்த நான்

சிவப்பென காற்றில் கலந்து கொண்டிருந்தேன்

எல்லாமாகிக் கலந்த என்னை

வெற்றுடலாக்கிய வீரத்தைப் பற்றிய மாயக்கதைகளோடு

பலர் கடந்து சென்றனர்

எனது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது

சிறுவர்கள் என்னை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்

வானம் என்னை அழுதது

நான் வானத்தை சிரித்தேன்

போர்க்குணத்தோடு என் கவிதைகளை

ஒருவன் படித்துக்கொண்டிருந்தான்

எனது நாலைந்து சொற்களை காற்று

முதுகில் ஏற்றி அலைந்தது

எனது மீதிப்பகலை அந்திரத்து

மர்ம வெளிகளில் பூசினேன்

வெறித்துச் சோம்பிய முகங்களுடன்

வீதியில் குழுமிய கூட்டத்தினிடையே

நெரிசல்களை நீவி

அவர்கள் சுமந்து சென்ற என் உடலை

பாத்துக்கொண்டிருந்தேன்

எண்ண வெளிகளில் மூழ்கிப்பார்க்க

நேற்றுப் போல் இருக்கிறது தெருவில்

என்னைக் கடந்து சென்ற எனது பிணம்

கனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்


கோரத்தின் வன்மநெடி
இன்னும் விட்டகலாப் பொழுதொன்றில்
காலத்தை தலையில் சுமந்தலைந்த போராளி
நேற்றயபின்னிரவில்
என் கனவில் வந்தான்
நெடிய வலியனாய் பெருநிலத்தனாய்
பருத்த தோளனாய்
வீரத்தின் கதைகள் உலவிய காலத்தில்
அவனை நானறிவேன்

கணை பிடித்த கரம் பற்றி
ஆற்றாது என்னுள் அமுக்கி அழுகி
சினியடித்துக்கிடந்த
பெருஞ்சினத்தை பேதமையை
போர்வை பாய் நனைய
கண்ணால் ஊற்றாது ஊற்றிவிட்டேன்

தூய கரத்தால் துடைத்தான்
நீ அழத்தெரிந்தவன் அல்லது அழப்பிறந்தவன்
நான் போராளி
உன்னைப்போல் ஆயிரம் கண்களை
துடைக்கப் போனவன்
அதனால் அழமுடியாதென்றான்

தேற்றினான் பாதகரைத் தூற்றினான்
பாழ் விதியைத் தந்தவர் மீது
காறித் துப்பச்சொன்னான்
நான் வந்த செய்தி பற்றி
திருவாய் மொழியாதிரு என்றான்

உரையாடல் முடித்துப் போராளி புறப்பட்டான்
வாசல்வரை அவனை ஓடி மறித்தேன்
போக்கனத்து உயிர் என்னை
விட்டகலாப்பொழுதுக்குள்
நேரில் வருவீரா என்றுரைத்தேன்
என் அகதிக் கொட்டிலைப்பார்த்த
போராளியின் கண்கள் சிவந்தன
ஆயிரம் கண்களை துடைக்கச் சென்றவன்
விட்டழுத கண்ணீரில் விளித்து விட்டேன்