அந்த குழந்தைகள் அழுகிறார்கள்
இதுவரை மீண்டு வராத அப்பாவுக்காக
அவர்களின் அம்மா வாசலை வெறித்துக்கொண்டிருக்கிறாள்
இடை விடாது அழுகிறது அவளின் கண்கள்
இணை பிரிந்து அழும் குயிலின் தகிப்பில் கிடக்கிறது
அவளின் மனம்
அநேகபொழுதுகளில் தற்கொலைக்கு துணியும் அவள்
பால் மணம் மாறாத குழந்தைகளின் முகத்தில்
உயிர்க்க வேண்டியிருக்கிறது
அந்த குழந்தைகள் எப்போதும் போலவே
சேமித்து வைக்கிறார்கள்
தமக்கு வழங்கப்படும் உணவின் பாதியை
வராமல் போன அப்பாவுக்கு
கடவுளின் குணம் அறியாத பிஞ்சுக் குழந்தைகள்
பிராத்திக்கிறார்கள்
அப்பா எப்போது வருவார் என்ற அவர்களின் கேள்வி
தாயை சாகடிக்கிறது
நாளைக்கு என்ற வார்த்தையையே
அவள் பதிலாக எப்போது உச்சரிக்கிறாள்
குழந்தைகளில் ஒருவன் அப்பாவை போலவே
தலை சீவிக்கொள்வதும் அவரின் உடைகளை
அணிவதுமாக இருக்கிறான்
அம்மா குழந்தைகளின் குறும்பை சேர்த்து வைத்திருக்கிறாள்
கணவன் வந்தவுடன் சொல்வதற்கென்று
எல்லா தடுப்பு முகாம்களிலும்
தன் கணவனின்முகம் தெரிகிறதா என
தேடித் தேடி களைத்துபோய் இருக்கிறது
அவளின் மனமும் கால்களும்
எனது தேசத்தின் கொடிய போர்
ஓவியங்களை கிழித்துக்கொண்டிருக்கிறது
பொம்மைகளை உடைத்து
குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்
காணாமல் போன அப்பா
மீண்டு வர வேண்டுமென்று
பிரார்த்தித்த படியே.
அப்பா
இன்னும் வரவில்லை
No comments:
Post a Comment