Thursday, February 24, 2011

எங்கள் குழந்தைகள் அழுகிறார்கள்

அந்த குழந்தைகள் அழுகிறார்கள்

இதுவரை மீண்டு வராத அப்பாவுக்காக

அவர்களின் அம்மா வாசலை வெறித்துக்கொண்டிருக்கிறாள்

இடை விடாது அழுகிறது அவளின் கண்கள்

இணை பிரிந்து அழும் குயிலின் தகிப்பில் கிடக்கிறது

அவளின் மனம்

அநேகபொழுதுகளில் தற்கொலைக்கு துணியும் அவள்

பால் மணம் மாறாத குழந்தைகளின் முகத்தில்

உயிர்க்க வேண்டியிருக்கிறது

அந்த குழந்தைகள் எப்போதும் போலவே

சேமித்து வைக்கிறார்கள்

தமக்கு வழங்கப்படும் உணவின் பாதியை

வராமல் போன அப்பாவுக்கு

கடவுளின் குணம் அறியாத பிஞ்சுக் குழந்தைகள்

பிராத்திக்கிறார்கள்

அப்பா எப்போது வருவார் என்ற அவர்களின் கேள்வி

தாயை சாகடிக்கிறது

நாளைக்கு என்ற வார்த்தையையே

அவள் பதிலாக எப்போது உச்சரிக்கிறாள்

குழந்தைகளில் ஒருவன் அப்பாவை போலவே

தலை சீவிக்கொள்வதும் அவரின் உடைகளை

அணிவதுமாக இருக்கிறான்

அம்மா குழந்தைகளின் குறும்பை சேர்த்து வைத்திருக்கிறாள்

கணவன் வந்தவுடன் சொல்வதற்கென்று

எல்லா தடுப்பு முகாம்களிலும்

தன் கணவனின்முகம் தெரிகிறதா என

தேடித் தேடி களைத்துபோய் இருக்கிறது

அவளின் மனமும் கால்களும்

எனது தேசத்தின் கொடிய போர்

ஓவியங்களை கிழித்துக்கொண்டிருக்கிறது

பொம்மைகளை உடைத்து

குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்

காணாமல் போன அப்பா

மீண்டு வர வேண்டுமென்று

பிரார்த்தித்த படியே.

அப்பா

இன்னும் வரவில்லை 

No comments:

Post a Comment