Sunday, February 20, 2011

கனவுகள் + கற்பனைகள் = பூச்சியம்


சொல்லாது போன சொற்களை

சேகரிக்கிறது தனிமை

நிலுவையில் இருக்கும்

பாதிச்சொற்களில் பயத்தின் நெடி

இன்னும் மறையவில்லை

மூடியற்ற என் கனவுக் குடுவையினூடு

வழிகின்ற எனது விம்பங்களில்

பரிதாபத்தின் தோரணை

அப்பிக்கிடக்கிறது

பினாத்தல்களின் சுதந்திரத்தில்

லயிக்கிறது மனது

தீராத பக்கங்களில் கலக்கமேதுமற்று

நிரம்பிக் கொண்டிருக்கின்றன

விடயற்ற கேள்விகள்


தீர்வுகளற்ற முடிவுறா

நெடும் பயணத்தின்

சிராய்ப்புத் தழும்புகளில்

மறைந்துகொண்டிருக்கும் எனது

சூரியோதயத்தின் மீது

நம்பிக்கையற்றிருக்கிறது பகல்

தனித்திருத்தலின் சாத்தியம்

அதிகரிக்க அதிகரிக்க

உடலற்று வான வெளிகளில்

நீந்துகிறது உயிர்


ஒவ்வொரு காலையும்

அதே நம்பிக்கயுடன்

நான் ஏந்தும் எனது

பிச்சை பாத்திரத்தின் மீது

விரல் பதிக்க துணிவற்றிருக்கிறார்கள்

சோறூட்டும் போது அம்மா சொன்ன

கதைகளில் வரும் தேவதைகள்


உயரத்தில் பறக்கும்

இனமும் மொழியுமற்ற பறவை ஒன்று

ஆயிரம் விடைகளோடு

உதிர்த்துவிட்டு போகும் இறகுகளில்

நிறைகிறது

தேவதைகளின் கண்களில்

அகப்படாத பிச்சைப் பாத்திரம்

No comments:

Post a Comment