நிலம் பிரிந்து போனவனின்
நெடுமூச்சிக்கப்பாலும்
முற்பிறப்பின் வினையொன்றில்
கரைந்துவிடும் மாயத்துள்
வாலைச்சுருட்டி வந்து
என்வீட்டு வாசலிலே
உமிழ் நீர் சொரிந்து நிற்கும்
உந்தன் விம்பந்தான்
இடிவிழுந்து இறுகிவிட்ட
இருதுதயத்தின் சுவர்களிலே
உன்வாயில் வழிகின்ற
உமிழ்நீராய் வியர்க்கிறது
விட்டுந்த வீட்டினுள்ளே
பூட்டிவைத்த பெட்டகத்துள்
பாட்டன் முப்பாட்டன்
பரம்பரைகள் போனபோதும்
கலங்காத கல்மனது
நீயென்ற ஐந்தறிவில்
நீர்த்திவலையாயிற்று
நிலம் பிரிந்த இரு தினத்தில்
அந்திக்கு அப்பாலே
விழுங்கணையில் உயிர் பிழைக்க
முகம் புதைய விழுந்தெழும்பி
ஊர் நுழைந்தேன் உன்பொருட்டு
பேயுறையுந்தெருவொன்றில்
முன்காலில் முகம்வைத்து
பார்த்தபடி படுத்திருந்தாய்
படு இருளில் கண்டவுடன்
தாவிக்குதித்தெழுந்தாய்
முனகி முனகியென்மேல்
பாய்ந்து நகம் பதித்தாய்
வந்து விட்ட பேருவப்பில்
மூச்செல்லாம் முட்டிவிட
நக்கி நக்கியென்னை
ஈரத்தில் குளிக்க வைத்தாய்
கண்பூளை காய்ந்த படி
ஒட்டிய உன் வயிறு
அடி மனது உறைய
என்னுயிரை உசுப்பியது
அரிசிகளை இறுத்தெடுத்து
அவிந்தும் அவியாமல்
கடைசிப்பசி தீர்த்தேன்
நடு நாக்கு வெந்து
தோலுரியும் படியாக
சுடு சோற்றில் பசி முடித்தாய்
ஊருக்கும் உனக்குமாய்
விடைபெற்ற அக்கணத்தில்
மூச்சிரைக்க ஓடிவந்து
வீரிட்டலறி ஊழையிட்ட
உன் குரலின் பாசைகளை பெயர்த்தால்
என்னோடு நீயும்
வருவதற்கு எத்தணித்த
மொழியொன்று இருந்திருக்கும்
அந்தப் பொழுதொன்றே
இன்னுமென் நடுநெஞ்சில்
குறுகுறுத்துக் கிடக்கிறது
நீமட்டும் வாய் பேசும்
வரம் பெற்று வந்திருந்தால்
நிலம்பிரித்த பாவியரை
திட்டி முடித்திருப்பாய்
குரல்வளையைப் பாய்ந்து
கடிக்க நினைத்திருப்பாய்
ஏதிலியுள் மூழ்கி
இற்று விட்ட வாழ்வினுள்ளும்
நினைவின் இடுக்குகளில்
என்னை வட்டமிடும் வால் சுருண்ட
நாய்க் குட்டியே
ஊர் பிரிந்து வாழ்கின்ற
அகதி முகாம் முற்றத்தில்
அம்மா கொட்டுகின்ற
பழஞ்சோற்றுச் சத்தத்தில்
ஓடிவந்து மொய்க்கின்ற நாய்களுக்குள்
உன்னுருவம் தெரியாதா என்றெனது
அடி மனது துடிக்கிறது
என்றோ ஓர் நாளில்
என் நிலத்தில் கால் பதிப்பேன்
அந்தக்கணத்தில் என்னை வரவேற்க
பறிபோன என்னூரில்
உக்கி உருக்குலைந்து உடலெல்லாம்
குட்டையென ஆகிவிட்டுப் போனாலும்
உன்னுயிரை எனக்காக
பற்றி வைத்திருப்பாய் என்றதொரு
ஆறுதலில் மட்டும்தான்
உக்கிய என்வாழ்வில்
உசும்புகின்ற உன்னினைவு
இடர் நிலத்தின் வலிகளுள்ளும்
இன்னும் வாழ்கிறது
என் பிரிய நாய்க் குட்டியே
No comments:
Post a Comment