Sunday, February 20, 2011

அரசனின் மரணமும் தேனீர்ச்சந்திப்பு


நிஜங்களை விட இப்போதெல்லாம்

கனவுகள் அழகானவை

வாழ்வின் புதிர்களெல்லாம்

கனவுகளில் மட்டுமே அவிழ்கின்றன

நேற்றய கனவில் ஒரு அரசன் இறந்து கிடந்தான்

மரணச்சடங்கில் நானும் இருந்தேன் என்பதால்

என்னில் அவன் தொடர்புபட்டிருந்திருப்பான்

உயிரோடிருந்த போது அவனைப் பற்றி

பெருங்கதைகள் உலாவின

அவனது கைகள் மிக நீளமாக இருந்தது

நிலங்களை பறித்தான்

பூர்வீக குடிகளை துரத்தினான்

தனது சேனையால் ஒரு இனத்தினை அழித்தான்

கால்களை முடமாக்கி விட்டு

பாலமமைத்தான் வீதிகளை செப்பனிட்டான்

சொத்துக்களை சேர்த்தான் இப்படி

ஏகப்பட்ட கதைகள்

இவற்றில் உண்மையில்லை

மரணத்தின் பின்

அவது கைகளில் எதுவுமிருக்கவில்லை

சுடலைக்கு அவனை கொண்டு சென்றனர்

விறகுகள் அடுக்க சாம்பலானான்

பறித்த நிலங்களில்

ஒரு துண்டும் அவனுக்கில்லை

புதிர்கள் அவிழ கனவு முடிந்தது

அதிகாலைத் தேனீர்ச்சந்திப்பில்

நண்பர் ஒருவர்

என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்

எனது அரசன் இப்போது

நிலங்களை பறிப்பதாகவும்

வீதிகளை செப்பனிடுவதாகவும்

நான் தேனீரை மிக விரும்பி

சுவைத்துக் கொண்டிருந்தேன்

No comments:

Post a Comment